05 செப்டம்பர் 2012

திரு சுரேஷ்குமார் இந்திரஜித் அவர்களின் “கணியன் பூங்குன்றனார்” சிறுகதைபற்றி

-----------------------------------------------------------------------------------------------------------------------

 

    sureshkumar Indrajith

-(தீராநதி ஆகஸ்ட் 2012 இதழ் வெளியீடு– (ஒரு விலகி நின்ற வாசக பார்வை)

-----------------------------------------------------------------------------------------------------------------------

தாவது பிரச்னை என்று வந்தால் அது அவர்களுக்கும் எழுதிய எழுத்தாளருக்குமுள்ள பாடு என்று தீர்மானித்துத்தான் இந்தக் கதையைப் பிரசுரித்திருக்க வேண்டும். படித்தவுடனேயே சொல்லப்படுவது உண்மையாய் இருந்தாலும் யாரும் சொல்லத் தயங்குவதாயிற்றே, சொன்னது கிடையாதே என்றுதான் தோன்றுகிறது. நின்றால் குற்றம் நடந்தால் குற்றம் என்கின்ற காலகட்டத்தில் நிற்பதுவும், நடப்பதுவும் அவனவன் உரிமை, அதனை யாரும் தடுக்க இயலாது என்கிறவிதமாய் எழுதப்பட்டிருக்கிறது இந்தக் கதை.

ஆனாலும் இப்படி ஒரு கதையைப் போடுவதற்கு சம்பந்தப்பட்ட பத்திரிகைக்கும் ஒரு தார்மீக தைரியம் வேண்டும்தான். எழுத்தை எழுத்தாகத்தான் பார்க்க வேண்டுமே தவிர, அதை யார் எழுதியுள்ளார்கள், அவரின் ஜாதி என்ன, குலம் என்ன, கோத்திரம் என்ன என்று பார்க்கக் கூடாது. ஆனால் அப்படிப் பார்க்கும் பார்வை அநேகமாய் இன்று பரவலாகிவிட்டது என்றுதான் தோன்றுகிறது. அதுதான் இன்றைய முற்போக்கு.

எழுத்து என்ன கருத்தைச் சொல்கிறது, அந்தப் படைப்பின் ஆழம் என்ன, சொல்ல வந்ததை சரியாகச் சொல்லியிருக்கிறதா, சிறந்த இலக்கியப் படைப்பாக அது அமைந்துள்ளதா என்பதை மட்டும்தான் பார்க்க வேண்டும். ஆனால் அப்படியான நடைமுறை தொலைந்து போய்விட்டது என்றுதான் நினைக்க வேண்டியிருக்கிறது. இலக்கியத்தில் ஜாதியைப் பார்ப்பவர்கள் எல்லாம் எந்த ஜாதிக்காரர்களை வெறுக்கிறார்களோ, தூஷணை செய்கிறார்களோ, செய்தார்களோ, அந்த ஜாதிக்காரர்களின் மேன்மையான எழுத்துக்களைப் படித்துப் படித்து வளர்ந்தவர்கள்தான். இன்றும் தங்களை மறந்து அவர்களின் படைப்புக்களைச் சிலாகித்து மகிழ்ந்து போகிறவர்கள்தான். வழிகாட்டியாக உணருபவர்கள்தான். இதை இல்லை என்று யாரும் மறுக்க முடியாது. அப்படி அவர்களை எடுத்து இயம்பவில்லையென்றால் தாங்கள் இலக்கியம் கற்றவர்களாக ஆகாது, தங்களைப்பற்றியதான மதிப்பீடு தாழ்ந்து போகும் என்று கவனமாய் இருப்பவர்கள் இவர்கள்.

இந்தக் கதையைப் போட்டிருக்கும் தீராநதி, கதையை மட்டும்தான் பார்த்திருக்கிறது, அதன் கருத்தில்தான் உள்ளோடிப்போய் பிரசுரம் செய்யத் துணிந்திருக்கிறது. ஆனால் இங்கே ஒரு கேள்வி விழுகிறது. இதே படைப்பை அந்தக் கதையின் ஓட்டுநராக வரும் கதாபாத்திரத்தின் ஜாதியைச் சேர்ந்த ஒரு எழுத்தாளர் எழுதியிருப்பாரேயானால், அதாவது ஒரு பிராம்மணப் படைப்பாளி எழுதித் தொலைத்திருந்தால் இது பிரசுரம் செய்யப்பட்டிருக்குமா என்றும் தோன்றுகிறதுதான். எதிர் அணிக்காரர் எழுதுவதனாலேயே அதைப் போடலாம் என்கிற தைரியமான ஒரு பிடிப்பு கிடைத்துப் போகிறது.

இந்தப் படைப்பைப் படைத்த படைப்பாளிக்கும், இதைப் பிரசுரித்த தீராநதிக்கும் இந்தப் படைப்பினால் வெவ்வேறு விதமான, தாறுமாறான கேள்விகள் எழக் கூடும், கண்டனங்கள் வரக்கூடும் என்று நிச்சயம் தெரிந்திருக்கும். ஆனாலும் கேட்க வேண்டிய கேள்விதான் என்று தீர்மானித்துத்தான் வெளியிடப்பட்டிருக்கிறது. கதையைப் படித்து முடித்தபோதும் அவ்விதமான நிறைவே ஏற்படுகிறது. அந்த வகையில் படைப்பாளியையும், தீராநதியையும் பாராட்டித்தான் ஆக வேண்டும்.

பிராமணரல்லாத பிற ஜாதியினரின் மனத்திரையில் ஓடிக் கொண்டிருக்கும் யதார்த்தத் திரைப்படக் காட்சிகள் இவைதான் என்பதுவே உண்மை. ஆனால் வெளியே வெளிப்படையாகச் சொல்லாமல் இருப்பதே ஏதோவொரு ஆறுதலைத் தந்து கொண்டிருந்திருக்கும் பலருக்கு. சொன்னால் சொல்லப்படுபவர்கள் மீண்டும் தலை தூக்கக் கூடும் என்கிற பயமாகவும் இருக்கலாமே…? அங்கேதான் பொய்மை ஆளுகிறது. மனசாட்சிக்கு அப்பால் விலகி நின்று படைப்புக்களைத் தரும் படைப்பாளி அவன் மனதிற்கே பொய்மையுடையவனாக ஆகின்றான். கண்ணால் காணக்கூடிய உண்மைகளை என் சத்திய எழுத்தின் அடையாளம் இவைகள்தான் என்று முன் வைக்க எவரும் தயாரில்லை. அங்கேதான் கோஷ்டிகளும், முற்போக்குகளும் இயங்கி வட்டமிட்டுக் கொண்டிருக்கின்றன.

கணியன் பூங்குன்றனார் என்ற தலைப்பிலான தீராநதி ஆகஸ்ட் 2012 இதழில் வெளிவந்த திரு சுரேஷ்குமார் இந்திரஜித் அவர்கள் எழுதிய படைப்பைப் பற்றித்தான் இப்படி முன் விளக்கத்தோடு ஆரம்பித்தாக வேண்டியிருக்கிறது. இப்படியான கதைகளைக் கண்டு பல வருடங்கள் ஆகிறது. ரொம்ப நாளைக்கு முன் திரு ம.நா.ராமசாமி அவர்கள் எழுதிய அறுபத்தொன்பது விழுக்காடு என்று ஒரு குறுநாவல் படித்ததாக நினைவு. அது கணையாழியில் வந்தது. எந்த அளவுக்கு எதிர்வினை கண்டது அது? எதிர்வினையாற்றுவதை விட கண்டுகொள்ளாமல் இருந்து அதை பலவீனப்படுத்துவதே இன்றைய கமுக்கமான வித்தையாக இருக்கிறதோ என்கிறவகையிலும் யோசிக்கத்தான் வேண்டியிருக்கிறது.

எடுத்த எடுப்பிலேயே தலைப்பிலேயே சூசகமாகச் சொல்லிவிடுகிறார் யாதும் ஊரே யாவரும் கேளீர் என்பதன் உட்பொருளாய். பிராம்மண ஜாதியிலான மனிதர்கள்பற்றிய நியாயமான கனிவான பார்வையும், அவர்களின் ஒழுக்கமும், கட்டுப்பாடும், உண்மையான உழைப்பும், பயந்த சுபாவமும், கரிசனத்தோடு நோக்கப்பட வேண்டிய ஒன்று என்பதாய் கதையோட்டத்தில் அங்கங்கே பொருத்தமாக சொல்லிச் செல்கிறார் கதாசிரியர். இந்த உலகம் அன்பு வலையினால் பின்னப்பட்டிருக்கிறது. மனிதனுக்கு மனிதன் அன்பு செலுத்தும்போது உலகம் ஒன்றுகூடிய இன்பமயமாகிறது. அந்த அன்பின் வழிப்பாடுதான் இந்தச் சிறுகதை.

ஒரு பையன் இருக்கான். சேகர்னு பேரு. அய்யரு…நல்லா பொறுமையா ஓட்டுவான். பயமில்லாமல் போயிட்டு வரலாம்…என்று அறிமுகப்படுத்தும்போதே ஏழைகளேயானாலும், பிராமணர்களின் ஒழுக்கமும், கட்டுப்பாடும், உழைப்பின்மீதான பக்தியும், கருத்தோடு அங்கே முன் வைக்கப்படுகிறது. இதனால் மற்ற யாரையும் குறைத்துச் சொல்கிறார் என்று விபரீத அர்த்தம் கொள்ளக்கூடாதுதான்.

ஜாதியே கூடாதுன்னுத்தானே பெரியார் சொன்னார்…பாப்பார ஜாதியை மட்டும் ஒழிச்சுக்கட்டு, மத்த ஜாதியை வச்சுக்கன்னா சொன்னார் என்று கேள்வி கேட்பதும், ஒங்க அப்பன் பெரிய சுயமரியாதைக்காரன்…நீ என்னடான்னா மரத்துக்குத் தேங்காய் உடைக்கிறே…வண்டியிலே பெட்ரோல் இருக்கா, பிரேக் சரியா இருக்கா, எல்லாம் கண்டிஷனா இருக்கான்னுதானே பார்க்கணும்….என்று ஊருக்கு நலமாய்ப் போய்ச் சேருவதற்கும், மரத்தின் அடையாளமாய் சீலைக்கார அம்மன் என்று தேங்காய் உடைத்து மரம் எப்படிக் கடவுளாகும் என்று பகுத்தறிவுக் கேள்வி எழுப்புவதும், பட்டுப் பட்டென்று உடைபடும் உண்மைகளாய் நிற்கின்றன. இறைவன் இருக்கின்றான் என்கிற தீர்க்கமான நம்பிக்கையின் அடிப்படையில் எதையும் கடவுளாய்ப் பார்க்க முடியும் என்கிற நியதி வேறு. எந்தவொரு ஜடப் பொருளையும் நேசிக்க முடியும் என்கிற நியாயம் உண்டுதான். ஆனால் பகுத்தறிவு பேசும் மக்கள் அங்கங்கே அவர்களின் தனிவழிப் பயணங்களில் எப்படி முரண்படுகிறார்கள் என்பதே இங்கு கருத்தாக நிற்கிறது.

இந்தக் கேள்விக்கான பதில் எதுவும் எதிர்த்தரப்பில் எழாமல் கதையை அடுத்த சம்பாஷனைக்குச் சட்டென்று நகர்த்தி விடுகிறார். இந்தச் சம்பாஷனையைக் கேட்ட சேகர் (ஓட்டுநர்) சாமி பாட்டுப் போடவா என்று கேட்க நினைத்து வாயடைத்துக் கொள்கிறான். அவனின் பழக்கமும், பயந்த சுபாவமும் அங்கே புள்ளியிடப்படுகிறது.

எங்கள் திராவிடப் பொன்னாடே….என்ற பாட்டும், அச்சம் என்பது மடமையடா அஞ்சாமை திராவிடர் உடமையடா….என்ற பாட்டும் ஒலிக்கும்போது அதை மானசீகமாய் ரசிக்கிறான் சேகர். அந்தத் தெளிவான கணீர்க் குரலின் ரம்யம் அவனைக் கிறங்க வைக்கிறது. ஆனாலும் அவன் உள் மனத்தில் அந்தப் பாடல்கள் சங்கடங்களை ஏற்படுத்தியது என்று கூறுகிறார் ஆசிரியர். அது அவ்வாறு இருக்க வாய்ப்பில்லை என்றுதான் தோன்றுகிறது. காரணம் அந்த இசையின் மகத்துவம் அப்படி. இசை அதன் பொருள் மாறுபாட்டினால் சிதைந்து விடுவதில்லை. மேன்மையான இசையின் மூலம் எப்படிப்பட்ட கருத்துக்களையும் ஆழப் பதிக்க முடியும் என்பதற்கான அப்பட்டமான சான்றுதான் அந்தப் பாடல். அந்தப் பாடல் வெளிவந்த காலம் அது எந்த வேறுபாடுமின்றி எல்லாராலும் மனமுவந்து ரசிக்கப்பட்டது. இன்றும் அப்படியேதான் எல்லோர் மனதிலும் வியாபித்துக் கிடக்கிறது. அதை அந்தக் குறிப்பிட்ட காலகட்டத்திலும், இன்றுவரையிலும், தேர்ந்த இசைக்கு எந்த வரையறையும் கிடையாது என்பதன் பொருளாய், குலம், கோத்திரம் வித்தியாசமின்றி ரசித்தவர்கள்தான் மிக அதிகம்.

சமூகம் ஒதுக்க ஒதுக்க எதற்கு இவர்களோடு வம்பு என்று ஒதுங்கிப் போனவர்கள் பிராம்மணர்கள். இருக்கும் காலச் சூழலுக்கேற்பத் தங்களை மாற்றிக் கொண்டு, தங்களுக்கான பாதை இவைகள்தான் என்று அறுதியிட்டுத் தேர்ந்தெடுத்துக் கொண்டு முன்னேறியவர்கள். எல்லாக் கால கட்டத்திலும் அந்த ஜாதியில் மிகவும் நலிந்த நிலையிலான ஏழைகளின் எண்ணிக்கை மிக அதிகமாய் இருந்திருக்கிறது. இன்றும் இருந்து கொண்டிருக்கிறது. அப்படியான கொடிய வறுமை நிலையிலும், செம்மையாக வாழ வேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டவர்களாய், அவையே அவர்களின் பிறப்பின் ஒழுக்க அடையாளங்களாய், தாங்கள் உண்டு, தங்கள் பிழைப்பு உண்டு என்று தேமேனென்று ஒதுங்கி இருப்பவர்கள் அந்தப் பிரிவினர்.

பாம்பையும், பாப்பானையும் கண்டால் பாம்பை விடு, பாப்பானை அடி என்றால் அவனைத்தான் அடிக்க முடியும். பாம்பை அடிக்க முடியாது. அதற்கான துணிவு கிடையாது என்பதை விட அவன் மேல் கொண்டுள்ள துவேஷம் சாலையில் சென்று கொண்டிருந்த ஒரு ஆச்சார பிராம்மணரின் குடுமியைக் கொத்தாகப் பிடித்து அறுக்கும் அளவுக்குச் சென்றிருக்கிறது. மனிதர்கள் மாக்களாய் வெளிப்பட்ட காலம் அது. பின்பு அது படிப்படியாய் ஓட்டு அரசியலுக்குள் நுழைந்து ஒடுங்கி தன்னைத் தானே வெட்கமின்றி ஒளித்துக் கொண்டது.

ஒதுக்கி ஒதுக்கி எந்த வசதி வாய்ப்பும் இல்லாமல், எல்லாச் சலுகைகளும் அற்றுப் போய், இருப்பதைக் கொண்டு சிறப்புடன் வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் அவர்கள். என்று அவர்கள் மற்றவர்களின் வம்புக்கு வந்தார்கள்?

எவ்வளவோ வசைகளைக் காலம் பூராவும் காதாரக் கேட்டாலும், எந்த எதிர்வினையும் செய்யாமல் தாங்கள் உண்டு, தங்கள் பாடு உண்டு என்று இருப்பவர்கள். அவர்களைக் கருணையோடு நோக்காவிட்டாலும் பரவாயில்லை, தேவையில்லாமல் சீண்டாதீர்கள் என்று சொல்லாமல் சொல்கிறது இந்தக் கதை.

சிவந்த நிறமுடைய மனிதரின் நெற்றியில் மெல்லிய ஒற்றை நாமக்கோடு. நாமமும் போட்டுக்கிறாங்க…பெரியார் படத்தையும் வச்சுக்கிறாங்க என்று ஒரு இடத்தில் சொல்கிறார். சமூகத்தில் எத்தனையோ விதமான வியாபாரங்களை நாம் காண்கிறோம். விதவிதமான அரசியல் விளையாட்டுக்களைக் கண்ணுறுகிறோம். எல்லாவற்றிலும், பொய்மையும், புனை சுருட்டும் இருப்பது கண்களுக்கும் அறிவுக்கும் தெளிவாகவே புலப்படுகின்றன.

அம்மாதிரியான நடவடிக்கைகளையும், தேவையில்லாமலான பிராம்மண துவேஷத்தினையும், இக்கதை மெலிதாகக் கீறிப்பார்த்திருக்கிறது. சுரேஷ்குமார் இந்திரஜித் அவர்களின் நேரடியாக சொல்லப்பட்ட அப்பட்டமான கதை இது. நிமிர்ந்த நன்னடையும், நேர்கொண்ட பார்வையும் ஒரு படைப்பாளிக்கு இருக்க வேண்டும் என்பது உண்மையானால் அவரின் இந்தச் சிறுகதை அந்த லட்சணங்களை உடையதாக இருக்கிறது என்று உறுதியாகக் கூறலாம்.

-----------------------------------------------

கருத்துகள் இல்லை:

  'குற்றம் புரிந்தவன்'  - சிறுகதைத் தொகுப்பு - புஸ்தகா.கோ.இன்  - ல் வெளியிடப்பட்டுள்ளது.    (www.pustaka.co.in) --------------------...