27 ஆகஸ்ட் 2012

"முடிச்சு" குறுநாவல்

 
(உயிரோசை இணைய இதழ் – 20.08.2012 வெளியீடு)(முதல் பகுதி)
0
"வாடா சூரி…என்ன டூரெல்லாம் போயிட்டு வந்தாச்சா?" - ஹாலில் அமர்ந்து தினசரி செய்தியில் ஆழ்ந்திருந்த கணேசலிங்கம் கேட்டார்.
தயக்கத்துடனேயே நுழைந்த சூரிய நாராயணன் என்ற சூரிக்கு முதலாளியின் யதார்த்தமான அழைப்பு சற்று தெம்பைக் கொடுத்தது. ‘என்னடா ஒரேயடியா பதினைஞ்சு நாள் லீவு கேட்குற? அப்புறம் கடையை யார் பார்த்துக்கிறது?’ என்று சலித்துக் கொண்டவர் இன்று சாதாரணமாய் அழைப்பது சற்று நிம்மதியைக் கொடுத்தது. கடையைப் பார்த்துக் கொள்ள என்று இன்னும் சில பேர்இருக்கிறார்கள் என்றாலும் அவனின் இருப்பு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதாக அவர் கருதுகிறார் என்பதற்கடையாளமாய் அவரின் கேள்வி இருந்ததில் இவனுக்கு மகிழ்ச்சியே!
"பதினைஞ்சு நாள் லீவெல்லாம் தர முடியாது…"என்று ஒரே போடாய்ப் போட்டவர்"அப்புறம் அப்டியே போயிட வேண்டியதுதான்…" என்று வேறு சொன்னார்.வயிற்றைக் கலக்கி விட்டது இவனுக்கு. பாழாய்ப் போன இந்தச் சுற்றுலாவில் போய் ஏன் இப்படி வலிய மாட்டிக் கொண்டோம் என்று நினைத்துக் கொண்டான்.எல்லாம் சின்ன வயதில் இருந்து காலில் சக்கரம் கட்டிக் கொண்டு அலைந்ததுதான். வீட்டில் தங்காத பிள்ளை என்று அப்பொழுதே தனக்கு ஒரு பட்டம் உண்டு. அது இன்று வரை நிறைவேறிக் கொண்டிருக்கிறது. அதென்னவோ தெரியவில்லை. ஊர் ஊராய்ப் போய்ப் பார்ப்பதில் அப்படி ஒரு மகிழ்ச்சி. கூட்டம் கூட்டமாய்ப் பல பேருடன் திரிந்து கொண்டிருப்பதில் என்னவோ ஒரு உற்சாகம்.ஓரிடத்தில் தங்காமல் நின்ற கால், முதலாளி கடையில் மட்டும் எப்படி இத்தனை வருஷம் நின்றது என்று இன்றுவரை அவனுக்கே தெரியவில்லை. "என்னடா கேட்டுக்கிட்டே இருக்கேன்…பதிலே சொல்ல மாட்டேங்கிற?" - தினசரியிலிருந்து பார்வையை விலக்கி அவனைக் கூர்ந்து பார்த்தார்.
"உடம்பு முடிலிங்கய்யா…இன்னும் ரெண்டு நா லீவு வேணும்…போன எடத்திலெல்லாம் வெய்யில் ஆள உருக்கிடுச்சி…வாயி வயிறெல்லாம் ஒரே புண்ணு…ஒரு மாதிரித் திரும்பி வந்ததே பெரிசுன்னு ஆயிப்போச்சுங்கய்யா…" -சொல்லியவனின் பார்வை கொல்லைப்புறம் வேலை செய்து கொண்டிருந்த பெண்ணின் மீது விழுந்தது. கிணற்றடியில் இருந்த பட்டாக் கல்லில் நனைத்த துணியை விரித்து சோப்பை இழுத்துக் கொண்டிருந்தது அது.
"வேலைசெய்ய ஆளிருக்குன்னு தெரிஞ்சிகிட்டு ரெஸ்ட் கேட்குறியாக்கும்…போடா..போடா… கடையைப் யாரு பார்த்துக்குவார்களாம்…அங்க இருக்கிற ஆளுகளுக்கு நீ இல்லன்னா கையொடிஞ்ச மாதிரி இருக்கு…பதினைஞ்சு நாளாச்சுடா கடை சுத்தமாவே இல்ல…நீ போயித்தான் சுத்தப்படுத்தணும்…போயி வேலையைப் பாரு…இங்க வரவேணாம்…கடையைப் பார்த்துக்க…புரியுதா? போ…போ…"
"திடீரென்று வீடு கட் ஆகிப் போனதில் சூரிக்கு மெல்லிய அதிர்ச்சி. அவன் பார்வை கொல்லைப்புறமிருந்து இன்னும் மீளவேயில்லை. அது யார் அது? முன்ன பின்ன இங்க பார்த்தது மாதிரியே இல்லையே? திடீர்னு வந்து எப்படி ஒட்டிக்கிச்சு?
சொன்னால் சொன்னதுதான். அதற்கு மேல் பெயராது என்று தெரியும். வாயை மூடிக்கொண்டு கிளம்பினான் சூரி. ஆனால் திடீரென்று வீட்டு வேலை கை விட்டுப் போனதில் மனதுக்கு ஒரு சங்கடம். காலையில் கடைக்குப் போகுமுன் இங்கு வந்து வீடு கூட்டிப் பெருக்கி. கொல்லைப் புறம் நனைத்து வைக்கப்பட்டிருக்கும் துணிமணிகளைத் துவைத்து உலர்த்தி விட்டுக் கிளம்பும் போது சூடாக டிபன் கிடைக்கும். டிபனுக்குப் பின் கடைசியாக அருமையான ஒரு காபியும் உண்டு.இனிமேல் அதற்கு எங்கே போவது? தனது அந்த நஷ்டத்தையும் சேர்த்து முதலாளி யோசிப்பாரா? எப்பவும்போல காலைல வந்து டிபன் சாப்பிட்டுப் போடா…!சொல்லுவாரா? சொல்லவில்லையே? வேலை செய்ததனால்தானே டிபன் கிடைத்தது.அதைச் செய்யாமல் எப்படிக் கிடைக்கும்? இனிமேல் தனது அந்தப் பங்கு அந்தப் பெண்ணுக்குப் போகுமோ? யாரோ வந்திருக்காப்போல இருக்கேன்னு ஒரு திரும்பல் கூட இல்லையே? நானான்னா அப்படியா இருப்பேன். கேட் திறக்குற சத்தம் கேட்டாலே உஷார் ஆயிடுவேனே? இனிமே முதலாளி வீட்டை அப்படி யார்கவனிச்சிப்பாங்க. இதெல்லாம் அவருக்கு ஏன் தெரியாமப் போச்சு? சட்டுன்னு கட் பண்ணி விட்டுட்டாரே? யோசனையூடேயே போய்க் கொண்டிருந்தான் சூரி. லீவு போட்டு விட்டுப் போனவன் அப்படியே எங்காவது போயிருக்கலாமோ? திரும்ப வந்ததுதான் தவறோ? எத்தனை நாள் லீவு எடுத்தாலும் சம்பளத்தைக் கழிக்காத நல்ல மனசுக்காரராச்சே முதலாளி? முழுச் சம்பளம் கிடைக்குமேங்கிற ஆசைதானோ?
திரும்ப நம்ப ஊருக்கு வந்தேன்னா கை நிறையப் பணத்தோடதான் வருவேன்…அல்லாத வரைக்கும் இங்க எட்டிக் கூடப் பார்க்க மாட்டேன்…என்னை மறந்துடுங்க…சபதம் போட்டதற்கு இணையாய் தான் ஊரைவிட்டுக் கிளம்பி வந்ததை நினைத்துக் கொண்டான் சூரி. அம்மாவும் ரெண்டு தங்கச்சிகளும் அழுதுகொண்டே விடைகொடுத்தது இன்னும் கண் முன்னால் நிற்கிறது. எத்தனை வருடங்கள் ஆயிற்று. என்னைக்கு நா சம்பாதிச்சு என்னைக்கு ஊர் போய்ச் சேருறது? அதுவரைக்கும் தங்கச்சிகளுக்கு கல்யாணம் காட்சி பண்ணாமக் காத்துக்கிட்டா அம்மா கெடக்கும்? என்னை மாதிரி வீட்டை விட்டு ஓடி வந்தவன நம்பிக் கெடப்பாங்களா யாரும்? - யோசனையூடேயே நடந்து கொண்டிருந்தவனின் கால்கள் அந்த மைல்கல்லின் நீண்ட தார்ச் சாலையின் துவக்கத்தில் வந்தபோது தானே தயங்கி நின்றன.
(2 )
"ஹலோ, வேதா நகர் போலீஸ் ஸ்டேஷனா? இன்ஸ்பெக்டர் மிஸ்டர் ஜார்ஜ் இருக்காருங்களா?"- கணேசலிங்கத்தின் குரலில் மெல்லிய பதட்டம். "லிங்கம் ஸார்,நா ஜார்ஜ்தான் பேசறேன்…என்ன விஷயம் சொல்லுங்க…" "ஒண்ணுமில்ல ஸார்…காலைல உங்கள டிஸ்டர்ப் பண்றேன்…அந்தப் பய சூரியை அனுப்பிட்டேன்…அதச் சொல்லலாம்னுதான்…" "ஓ.கே., இனிமே அவன வாட்ச் பண்ணவேண்டியது என் வேல…அத நா பார்த்துக்கறேன்…கடைல எப்பவும் போல அவன் இருக்கட்டும்…மத்த ஆளுகள்ட்டயும் சொல்லி வைங்க…அவனோட எதுவும் பேசிக்க வேணாம்…"
"அத அன்னைக்கே சொல்லிட்டேன் ஸார்…எந்தச் சந்தேகமும் வராம நடந்துக்குவாங்க…"
"ரைட்… …உங்க வீட்டுக்கு வந்திட்டு பிறகு அவன் எங்க போனான் தெரியுமா?"
"எங்க ஸார் போகப் போறான்…எங்க ஸ்டாஃப் தங்குற எடத்துக்குத்தான் போவான்…பெறவு கடைக்கு வருவான்…ஆனா ஒண்ணு பாவம் ஸார் ,அவன்…ரொம்ப வருஷமா எங்கிட்டக கிடக்கான்…அவன சந்தேகப்படுறதுல அர்த்தமேயில்லைன்னுதான் எனக்குத்தோணுது…" "நீங்க யாரையெல்லாம் நல்லவங்கன்னு சொல்றீங்களோ, அவுங்களையும் சேர்த்துச் சந்தேகப்படுறதும்,விசாரிக்கிறதும்தான் எங்களோட வேலை…போலீஸ்கண்ணுல நீங்களும்தான் இருப்பீங்க…"
"என்ன சொல்றீங்க இன்ஸ்பெக்டர்…?"
"சும்மா விளையாட்டுக்குச் சொன்னேன். பயந்துட்டீங்களா?"
"பயப்பட என்ன இருக்கு? உங்க கிட்டே வந்தாச்சுல்ல…எல்லாத்தையும் எதிர்நோக்கித்தான் ஆகணும்…"- எதிர்ப்புறத்தில் சிரிப்பது கேட்கிறது கணேசலிங்கத்திற்கு. போதும் என்று அத்தோடு இணைப்பைத் துண்டிக்கிறார்.
எத்தனை வருஷமாய் இந்த வீட்டில் நாய் போல் கிடக்கிறான் இந்த சூரி. அவனைப் போய் சந்தேகப்பட்டு விட்டேனே? நான் போடும் சோறு, நான் கொடுக்கும் துட்டு இதைத் தவிர அவனுக்கு வேறு ஏதுமே தெரியாதே! அவனைப் போய் சந்தேகிப்பதா? பாவமில்லையா? இத்தனைக்கும் சம்பவம் நடந்த அன்று அவன் ஊரிலேயே இல்லையே? அவன்தான் ஊர் சுற்றப் போய் விட்டானே? முன்னதாகவே லீவு போட்டுவிட்டுப் போனவனை இப்படி சற்றும் எதிர்பாராவிதமாக இனிமேல் வீட்டுக்கு வர வேண்டாம் என்று அனுப்பலாமா? கனகலட்சுமியாவது சொன்னாளா?அவளுக்குமே இவன் மீது சந்தேகம் இருந்ததோ என்னவோ? பேசாமல் இருந்து விட்டாளே? என் பிள்ளை மாதிரி அப்படி இப்படி என்பாளே அடிக்கடி? அதெல்லாம் என்னவாயிற்று? இப்படி முகத்திலடித்தாற்போல் வெளியே அனுப்பவா? அந்தப் பெண் யாரோ என்னவோ? திடீரென்று கொண்டு வந்து நிறுத்தி போய் வேலையைச் செய் என்று விட்டாளே? அதைப் பற்றி ஏதாவது விசாரித்துத்தான் செய்தாளா?யாராவது சொன்னார்கள் என்று கொண்டு வந்து வைத்துக் கூத்தாடுகிறாளா?என்னதான் ஆனாலும் கல்யாணம் ஆகாத வயசுக்கு வந்த பெண்ணை இப்படிக் கொண்டு வந்து வைத்துக் கொண்டு, செமத்தியாய் வேலை வாங்குவது சரியா? சூரிவீடு கூட்ட, துணி துவைக்க என்று முடித்துவிட்டுக் கிளம்பி விடுவான். இந்தப் பெண் இவளுக்கு அடுப்படியிலும் உதவியாய் இருக்கிறாள். தன் வேலைகளைப் பெருவாரியாய்க் குறைத்துக் கொள்வதற்கு என்று வகையாய் அமைந்தது என்று தேர்ந்தெடுத்து விட்டாளோ? எதுவோ இருக்கட்டும். அது யார் என்ன என்று விசாரிக்க வேண்டாமா? கோயிலுக்குப் போன இடத்தில் ஒரு அம்மாள் சொன்னாள் என்று மட்டும்தானே சொன்னாள். எத்தனை வருஷத்து நம்பிக்கை இந்த சூரி?அவனைப் போய் நீ கடையோடு கிட என்று திடீரென்று சொன்னால்? பாவம், அவன் விகல்பமறியாதவன். முதலாளி வாக்கு வேதவாக்கு என்று போய் விட்டான்.அதுவே இவளுக்கு வசதியாய் வேறு போயிற்று. போதாக் குறைக்கு இப்பொழுது அவனைச் சந்தேகப்பட வேண்டியும் இருக்கிறது. ம்ம்! நான் எங்கே சந்தேகப்பட்டேன். போலீஸ் சொல்கிறதே என்று செய்ய வேண்டியிருக்கிறது!நினைத்துக் கொண்டே தன் அறைக்குள் காலடி எடுத்து வைக்கப் போனவரின்;பார்வை அங்கே பெருக்கிக் கொண்டிருந்த அந்தப் பெண்ணின் மீது விழுந்தது.அப்ப்ப்பா….! என்ன ஒரு மதர்ப்பான தேகம்! ஒரு கணம் தடுமாறித்தான் போனார்கணேசலிங்கம்.
"நாந்தான் உங்க ரூமைக் கூட்டச் சொன்னேன். ரொம்பத் தூசியாக் கிடந்தது. அது கூட்டி முடிக்கட்டும்…நீங்க சித்த இப்படி வாங்க…" - உடனேயே கணீரென்று வந்த மனைவியின் குரலில் சடாரென்று நிதானத்துக்கு வந்த கணேசலிங்கம் ஹாலில் வந்து மீண்டும் அமர்ந்தார்.
ஆனால் பார்வை மட்டும் தவிர்க்க முடியாமல் அந்தப் பெண்ணின் மீது படிந்திருந்ததை கனகலட்சுமி கவனித்துவிடக் கூடாதே என்று தன்னை ரொம்பவும் கஷ்டப்பட்டு நிதானப்படுத்திக் கொள்ள முயன்றார் அவர்.
 ( 3 )
"டேய், போயி கஸ்டமர்சுக்கு நாலு காபி வாங்கிட்டு வா…" - யூனிபார்மில் இருந்த சூரியைப் பார்த்துச் சொன்னார் நாகசாமி. ரொம்ப வருஷமாய் அந்தக் கடையில் இருப்பவர் அவர். அது அந்த ஊரின் பெயர் பெற்ற நகைக் கடை. இன்று எவ்வளவோ நாகரிகமான ஷோ ரூம்களுடன் எத்தனையோ கடைகள் அந்த நீண்ட நகைக் கடை வீதியில் உதித்திருக்கலாம். ஆனாலும் அங்கே வேலை பார்ப்பவர்கள் எல்லாருக்கும் அவர்தான் சீனியர். நாகுண்ணே…நாகுண்ணே என்றுதான் எல்லோரும் அவரை அழைப்பார்கள். மனதில் கல்மிஷம் இல்லாமல் பல ஆண்டுகளாக உழைத்து வருபவர். அவருக்கென்று ஒரு குடும்பம் என எதுவும் கிடையாது. அந்தக் கடைதான் அவருக்கு எல்லாமும். அங்கேயே இருந்து அங்கேயே படுத்து, உருண்டு, புரண்டு, காலத்தை ஓட்டி வருபவர். அந்தவகையில்தான் அவருக்கு சூரி மேல் ஒரு கரிசனம், தன்னைப் போல் அவனும் ஒரு அநாதைப் பயல் என்று. அப்படித்தான் சொல்லியிருந்தான் சூரி எல்லோரிடமும். யாரும் இன்றுவரை அதற்கு மேல் எதுவும் அவனிடம் கேட்டதில்லை. எடுபிடியிடம் என்ன கேள்வி வேண்டிக் கிடக்கிறது என்று விட்டு விட்டார்களோ என்னவோ?
நாலு மாடிக்கும் லிப்ட்டில் மேலேயும் கீழேயுமாய்ப் போய்க் கொண்டிருப்பான் அவன். எங்கெங்கு கஸ்டமர்கள் நுழைந்தாலும் அவர்களுக்கு காபி, டீ வேண்டுமா என்று கேட்க வேண்டியது அவன் வேலை. தரை தளத்தில் நுழைபவர்களை எங்கே அழைத்துச் செல்ல வேண்டி கை காண்பிக்கிறார்களோ அங்கே கூட்டிச் சென்று விடுவதும் இவன் வேலையாகிறது. அழகழகாய்ப் பதுமைகளாய்ப் பெண் பிள்ளைகளை முதலாளி நிறுத்தித்தான் இருந்தார். ஆனாலும் சூரியின் முக்கியத்துவம் என்பது தனி. நாகசாமிக்கு சமதையாகப் பொறுப்புக்களைச் சுமப்பவன் அவன். எல்லாம் சரிதான். ஆனால் இன்று வந்ததிலிருந்து அவரைத் தவிர வேறு எவரும் அத்தனை முகம் கொடுத்துப் பேசவில்லையே ஏன்?இவனுக்கு மட்டும் நினைச்சா லீவு, நினைச்சா பணம், பீத்தப் பயலுக்கு வந்த வாழ்வப் பாரு…என்று பொறாமைப் படுகிறார்களோ? அதுக்கென்ன செய்றது?என்னமாதிரி கதியாக் கிடந்து வேலை செய்யணும்ல…கூப்பிட்ட நேரத்துக்கு வீட்டுக்கு ஓடுறேன்ல…எவன் செய்வான்? எவனையாவது செய்யச் சொல்லு பார்ப்போம்? ஒரு நாளைக்காச்சும் சலிச்சிருப்பனா? சடைச்சிருப்பனா? என் அலுப்பை முகத்துல காட்டிக்கவே மாட்டனே? அதுதான முதலாளிக்கு என்னைப் பிடிச்சிப் போச்சு! அப்பத்தான நெருங்க முடியும்! இந்த சூட்சுமம் எவனுக்குத் தெரியுது இந்தக் கடைல? எல்லாம் படிச்சவுகளாத்தான் இருக்காங்க…புண்ணியம்? மனுஷாளப் படிக்கலையே? தனக்குத்தானே பெருமைப்பட்டுக் கொண்டான் சூரி. இன்றைக்கு என்னவோ ஓய்வில்லை ஒழிவில்லை. வந்ததிலிருந்து டைட். "எங்கெங்கயோ சுத்தியடிச்சிட்டு வந்து இன்னிக்கே என்ன ஓட்டம் ஓடுறான் பார்த்தியா?" டைமன்ட் செக்க்ஷன் அருணாச்சலம் சொல்வது இவனின் காதில் விழுந்து விட்டது.அருணாச்சலம் அங்கு வந்ததிலிருந்து அருண் ஆகி விட்டான். இம்மாதிரிப் பெயர்களையெல்லாம் அழகாகச் சுருக்கியிருந்தார் முதலாளி. டேய் நாராயணா…என்று கூப்பிட்டுக் கொண்டிருந்தவர்தான். கடைக்கு வந்த நாளிலிருந்து வெறும் சூரி ஆகிவிட்டது. சரி, கெடக்கட்டும், ஒண்ணுமில்லாதவன எப்படிக் கூப்பிட்டா என்ன என்று விட்டு விட்டான் இவனும். அவரே சதம் என்று வந்து விழுந்து கிடப்பவனுக்கு பெயரில்தான் வந்ததா கேடு!
மதியத்திற்கு மேல் வெயில் தாழ முதலாளியிடம் அனுமதி கேட்டுக் கொண்டு புறப்பட்டான் இவன். அவன் கால்கள் நேரே ஊருக்கு வெளியே இருந்த அந்தத் தார்ச்சாலையை நோக்கி வேகமாய் நகர்ந்தன. அங்கிருந்து எத்தனை கி.மீ.என்பதை அவன் மனம் இதுநாள்வரை கணக்கிட்டதில்லை. ஆனால் அன்று எப்படியும் அந்த அவனைப் பார்த்துவிட வேண்டும் என்ற முடிவோடுதான் போய்க் கொண்டிருந்தான் சூரி.
என்னாச்சு அந்தப் பயலுக்கு. அன்னைக்குப் பார்த்தபிறகு ஆளையே காணோம்.என்ன நினைச்சிக்கிட்டிருக்கான் அவன் மனசுல? சரி, அக்கா பையன்தானேன்னு எடம் கொடுத்தா மடத்தப் பிடிக்கப் பார்ப்பான் போல? இத்தனைக்கும் அடிக்கடி என்னைத் தேடி வராதடான்னு வேறே சொல்லியிருக்கேன். அதுக்காகக் காசு வாங்கிட்டுப் போனா திருப்பிக் கொடுக்கிறதேயில்லையா? நானே ஊரு பூராவும் சுத்திப்பிட்டு வெறும் ஆளா வந்திருக்கேன்…இவன் என்னடான்னா திரும்பிக் கூடப் பார்க்க மாட்டேங்கிறானே? இவன நம்பி எதுவும் செய்ய முடியாது போலிருக்கே!நினைத்தவாறே கால்களை எட்டிப் போட்டுக் கொண்டிருந்தான் சூரி. அந்த வழியே எந்த பஸ்களும் அந்த நேரத்தில் இருக்காது என்பதை அறிவான். ஆனாலும் அதுவே அவனுக்குச் சாதகமாகி விடக் கூடாதே என்கிற பயம் மனதுக்குள் பற்றிக்கொள்ள மெதுவே வேகமெடுத்து ஓட ஆரம்பித்தான் சூரி.
( 4 )
"ஏட்டையா, கொஞ்சம் இப்டி வாங்க…பேசுவோம்…" - இன்ஸ்பெக்டர் ஜார்ஜ் ஏட்டு பீதாம்பரத்தை அழைத்தபோது அதிர்ந்துதான் போய்விட்டார் அவர்.என்றைக்குமில்லாமல் இன்னைக்கு என்ன புதுசாய்? மதிய வேளையில் பொழுது போகவில்லையோ? நேற்றுத்தான் மினிஸ்டர் ப்ரோக்ராம்.. இன்று காலையோடுதானே ஓய்ந்தது. அந்த ஆசுவாசத்தில் அழைக்கிறாரோ? எப்பொழுதும் இம்மாதிரி கூப்பிட்டுப் பேசியதில்லை. இன்று என்ன மனதில் கொண்டு கூப்பிடுகிறாரோ? எவனுக்குத் தெரியும்? தயக்கத்தோடேயே போய் அமர்ந்தார்பீதாம்பரம்.
"ஏன் ஏட்டயா, அந்த நகைக்கடைக்காரா வீட்டுல யாரு திருடிருப்பாங்கன்னு நினைக்கிறீக நீங்க?"- கேள்வி இம்மாதிரி வரும் என்று சற்றும் எதிர்பார்க்கவில்லை.ஸ்டேஷன் உண்டு, தான் உண்டு என்று இருப்பவரிடம் இப்படி ஒரு கேள்வியைத் திடீரென்று வீசினால் என்னதான் செய்வது? எஃப்.ஐ.ஆர் எழுதினேன் என்பதற்காக என்னையே கேஸை அலசுமய்யா என்பார் போலிருக்கிறதே?
"யாருங்கய்யா கண்டது? யாரை நம்பறது இந்தக் காலத்துல? எனக்கென்னமோ எல்லாமும் தப்பாகிப் போச்சுன்னு தோணுது. அண்ணன், தம்பி, அக்கா, தங்கச்சி, தாய்,தகப்பன், மாமன், மச்சான்னு எந்த உறவையும் நம்ப முடிலங்கய்யா…என்னடா இவன் இப்டிச் சொல்றானேன்னு தோணும்…நட்பு, நம்பிக்கை, பாசம், நேசம்னு எல்லாமும் இருக்கத்தான் செய்யுது…ஆனா இந்தப் பணத்து முன்னால எல்லாமும் அடிபட்டுப் போகுதுங்க…"
"நீங்க சொல்றது கரெக்ட்தான்யா…அவர் வீட்ல திருடுனவங் கூட இருக்கிற நகையையெல்லாம் விட்டுட்டு பணத்த மட்டும் எடுத்திருக்கானுங்க…அதான் எனக்கு ஆச்சரியமாயிருக்கு…நகையை எடுத்தா அத அடையாளம் வச்சு பிடிபட்டுக்கிருவோம்னு நினைச்சிட்டாங்களா? பணம்னா சந்தேகம் வராது.எங்கயாச்சும் வெளியூர் போயி ஜாலியாச் செலவு செய்யலாம்னு தோணியிருக்கும்…பணமாக் குறி வச்சவங்க லிஸ்ட் நம்மகிட்ட இருக்குல்ல…அதுல எவனாச்சும்தான் இருப்பான்னு பார்த்தா எல்லாப் பயல்களும் உள்ளதான கிடக்கானுங்க? பின்ன புதுசா எவன் முளைச்சிருப்பான்? ஒருவேளை திருவிழாவுக்குன்னு ஏதாச்சும் கோஷ்டி வந்து எறங்கியிருக்குமோ? இந்தத் திருச்சிப் பசங்களும் ஒடுங்கித்தான கிடக்கானுங்க…அப்டியே அவிங்க கிளம்பினாலும் பக்கத்துல வச்சிக்கிறமாட்டானுங்களே? வெளி மாநிலத்துக்குத்தான போயிட்டு வருவானுங்க…அதான் ஒரே யோசனையா இருக்கு…"
"என்னங்கய்யா…நீங்களே குழம்புறமாதிரி பேசுறீங்க…எங்கிட்ட இப்டித்தான் பேசுவீங்க…இன்னொரு பக்கம் வேல நடந்திட்டிருக்கும்…இந்நேரம் எவன் உங்க மைன்ட்ல பிடிபட்டு மிதிபட்டிட்டிருக்கானோ….கொலை கிலன்னா இப்பல்லாம் கோர்ட்ல போய் ஜாக்ரதையா சரண்டர் ஆயிடுறானுங்க…இந்தத் திருட்டுலதான் இன்னும் வழி பிறக்கல…இதுல எப்படி சரண்டர் ஆகுவானுங்க…
நல்லா ஜாலியா ஊர் சுத்தணும்னுதான பணமாத் திருடுறானுங்க…அதுலயும் பாருங்க எம்புட்டு ஜாக்கிரதன்னு…திருட வந்தாச்சு…வசதியா எடுத்திட்டுப் போறமாதிரி சூழ்நிலையும் இருக்கு…ஆனா பணத்த மட்டும் கை வைக்கிறானுங்க…நகையைத் தொடக்கூடாதுன்னு ஒரு சங்கல்பம்…அப்போ திருட வர்றவனும் மனுஷந்தாங்கிறதும், அவன்ட்டயும் ஏதோ ஒரு மூலைல ஆசையில்லாத தன்மையும் இருக்கிங்கிறது உறுதியாகுது பார்த்தீங்களா? இந்தத் தன்மையை முழுக்க நல்லதுக்குத் திருப்பி விடுறதுக்கு ஒருத்தர் இல்லாமப் போகக் கண்டுதான அவனுங்க இப்டி ஆயிட்டானுங்க? இன்னும் தெளிவாச் சொல்லப் போனா இந்தப் பணம்தாங்கய்யா மனுஷன எல்லாவிதமாவும் மாத்திடுது. சின்ன வயசுலர்ந்து நல்ல வழில வந்தவனுங்க தப்புத் தண்டான்னு போறதில்லீங்க…வளர்ப்பு சரியில்லாம அல்லது கவனிப்பு இல்லாம, குடும்பச் சூழ்நில சரியில்லாம நில குலைஞ்சு போயிடுதே எத்தனையோ குடும்பம்…அதுலதாங்கய்யா பல பேரு இப்டி ஆயிடுறானுங்க…"
பீதாம்பரம் சொன்னதை ஜார்ஜ் கவனித்தாரா தெரியவில்லை. அவர் சிந்தனை எங்கேயோ இருந்தது. இரண்டு நாட்களாக பஜாரில் நகைக் கடைத் தொழிலாளர்கள் தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருவது அவருக்கு அந்த நேரத்தில் கவலையளிப்பதாக இருந்தது.
இப்படி எடுத்ததற்கெல்லாம் கூட்டம், கோஷம் என்று கிளம்பினால் பிறகு என்னதான் செய்வது? ஒரு நகைக் கடையில் திருட்டுப் போனாலும், நகைக் கடை முதலாளியின் வீட்டில் திருட்டுப் போனாலும் சந்தேகக் கொக்கிகளை எல்லாத் திசைகளிலும் வீசிப் பார்ப்பதுதானே காவல் துறையின் வேலை. சம்பந்தப்பட்டது,சம்பந்தப்பட்டவர் என்று கிளை பிரிந்து கொண்டுதானே போகும்? வந்து விசாரிக்கவே கூடாது என்று சொன்னால் பிறகு அவரவர் கடமையை எப்படித்தான் செய்வது? - யோசனையில் ஆழ்ந்திருந்த அவரின் சிந்தனையைத் தொலைபேசி அலறிக் கலைக்க, ஓடோடி வந்த பீதாம்பரத்தைத் தடுத்து, நா பார்த்துக்கிறேன் என்றார் ஜார்ஜ.


(தொடர்ச்சி கீழே...)









































கருத்துகள் இல்லை:

  “தபால் ரயில்“   – தஞ்சாவூர்க் கவிராயர் சிறுகதை   - விமர்சனம் – உஷாதீபன் – விருட்சம் கூட்டம் நாள் 12-04-2024.            அ ஞ்சலட்டை நம் வாழ...