10 டிசம்பர் 2011


அவன் என் நண்பன்...!

ங்களோடு யாரும் சேரமாட்டார்கள். நானும் அவனும் மட்டுமே. நண்பர்கள் சேரும்போது அவன் வந்துவிட்டால் ஒரு அநிச்சைச் செயல்போல மற்றவர்கள் பிரிந்து விடுவார்கள். அவனைப் பிடிக்காமல் இல்லை. இனி நானும் அவனும் இருக்குமிடத்தில் அவர்கள் இருக்க முடியாது என்பதற்காக.

எங்கள் கால்கள் தானாகவே அந்த ஊருக்கு வெளியிலான நீண்ட சாலையை நோக்கி நகர ஆரம்பித்து விடும். கால்கள் போய்க்கொண்டிருக்கும். மனம் வேறொன்றில் லயித்திருக்கும்.

முதல் கவிதை வரி அவனுடையதா? என்னுடையதா? சந்தேகமென்ன? அவனுடையதாகத்தான் இருக்கும். அதன் தொடர்ந்த இரண்டு வரிகள் நிச்சயம் என்னுடையதுதான். ஆனால் அது கவிதை வரிகளாய் இருந்ததா என்பது இன்றும் எனக்கு சந்தேகம்தான். ஆனாலும் அதைத் தொடர்ந்த இரண்டு வரிகளை அவன் சொன்னான். பிறகு நானும் சொன்னேன். இப்படித்தான் பயிற்சி ஆரம்பமானது. அவன் வரிகள் அன்றே நன்றாயிருந்தன. உள்ளார்ந்த ஆழமான அர்த்தங்களை உள்ளடக்கியதாய் மிளிர்ந்தன. அது அவன் வரிகள் என்பதாய். இங்கே வேறொரு அர்த்தம் இருக்கிறது. புரிகிறதா?

அவன் சொன்னான். நீ கதை எழுதுடா…! உனக்கு வரும்…என்னிடமுள்ளதைக் கண்டு பிடித்துச் சொல்லி அன்றே என்னை உசுப்பி விட்டவனும் அவன்தான். என்னிடம் அப்படி ஒன்று இருக்கிறது…என்னால் ஓரளவுக்கேனும் முடியும் என்கிற அளவிலான எண்ணங்கள் கூட அன்று என்னிடம் இல்லைதான்.

இன்றும் கூட நான் வாசிப்பனுபவத்தினாலும், என்னுள் படிந்துள்ள ஆழ்ந்த ரசனையினாலும்தானே எழுதிக் கொண்டிருக்கிறேன்…! ஆனாலும் இளம் பிராயத்தில் என்னிடம் அப்படி ஒன்று இருந்தது என்பதை உணர்ந்து சொன்ன அவனின் சுட்டுதல் என் மனதில் விதையாக விழுந்தது என்பது மட்டும் என்னவோ உண்மை.

அன்று அவன் எழுதிய கவிதை அப்பொழுதே கணையாழியில் வந்தது. சொன்னபடி நிரூபித்தவன் அவன். நானும் ஒரு கவிதை எழுதினேன். அது மரபுக் கவிதை. அது தீபத்தில் வந்தது. என் கவிதை உடனே புரிந்தது. அவன் கவிதை?

உள்ளுக்குள் என்ன வைத்திருக்கிறாய்? என்றேன் நான். அதுதானே கவிதையின் சூட்சுமம்? எதையோ வைத்ததனால்தான் அது அன்று கவிதையானது. அப்பொழுதே அதை அவன் எனக்கு விளக்கிச் சொன்னதனால்தான் புரிந்தது எனக்கு.

ஒருவேளை அவன் என் கூடவே இருந்திருந்தால் நானும் அவனைப் போல் புரியாத கவிதைகளை (எத்தனை பாமரத்தனமான வார்த்தை…?)எழுதியிருப்பேனோ என்னவோ? புரியாத என்பது இங்கே புரிந்து கொள்ள இயலாமை என்பதாகத்தான் நான் பார்க்கிறேன். ஒன்றிரண்டை அவன் விளக்கிச் சொன்னபோது ஆஉறா…இப்படியெல்லாமும் எழுத முடியுமா? என்று பிரமித்துப் போயிருக்கிறேனே நான்…அப்படியான கவிதைகள் இன்றும் கூட என்னை மிரட்டிக் கொண்டுதான் இருக்கின்றன. மிரட்டும் கவிதைகள் சிலவற்றை நானும் கூட வாசிப்பு தோஷத்தினால் எழுதிக் கொண்டிருக்கிறேன். அவை ஏற்றுக் கொள்ளப்பட்டும் இருக்கின்றன. ஆனால் அவை வெறும் வார்த்தைகளின் சேர்க்கைதானோ என்கிற ஒரு தீர்க்க முடியாத சந்தேகமும் கூடவே எனக்கு இருந்து கொண்டுதான் இருக்கிறது.

இவன் என்ன தன் படைப்பைப்பற்றித் தானே இப்படிச் சொல்லிக் கொள்கிறான் என்பதாகப் பலருக்கும் தோன்றக் கூடும். ஏனென்றால் அது இன்று இல்லை. மனதுக்குள் மட்டும் பலருக்கும் இருக்கிறது. ஆனால் வெளியே எப்படித் தூக்கி நிறுத்தியிருக்கிறேன் பார் என்கிறார்கள். மௌனமாய்ச் சிரிக்கிறார்கள் பலர். கவிதையை உள்ளார்ந்த பொருளுடன் உணர்ந்தவர்கள்.

ஏராளமாய் எழுதிக் குவிக்கிறார்கள் இன்று. கணிணி வலைகளில் குப்பையாய்ச் சேருகிறது அத்தனையும். எத்தனை மனதில் நிற்கும் தகுதியாகிறது. நிறைய எழுதும் ஆர்வம் பல நூறு பேர்களிடம். அதற்கான பயிற்சிக் களம் கணினி இதழ்களும், வலைகளும்.. எனக்கு உட்படத்தான்.

அன்றே நிறையப் படிக்க ஆரம்பித்து விட்டவன் அவன். நானும்தான். ஆனால் நான் படித்தது வேறு. அவன் படித்தது வேறு. நான் சற்றுக் கமர்ஷியல் ஆனவன். அவன் இதற்கு எதிர்மறை.

நான் கதையாளனானேன். அவன்? உளவியலாளன் ஆனான். நம்புகிறீா்களா? ஆம் அதுதான் உண்மை. அவன் தேடியது அவனுக்குக் கிடைத்திருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும். மனிதனைப் பண்படுத்தும் ஞான நிலைபற்றிப் பேச ஆரம்பித்து விட்டான் அவன். சமூகவியலாளனாகவும், உளவியலாளனாகவும் இன்று பரிமளிக்கிறான்.

ஞான நிலைகளின் படிநிலைகளை புராதன ஞானம், மாந்திரீக ஞானம், தொன்ம ஞானம் என்று வகைமைப்படுத்தி விளக்குகிறான். அறிவு நிலைகளின் வகைமைகளைப் பட்டியலிட்டு இலக்கியம் அறிவு நிலையை எளிதாக வெளிக் கொண்டு வருகின்றது என்கிறான். மனித வளம் உள்ளும் புறமுமாக நிகழ்கின்ற ஒன்று என்பதை உரிய சான்றுகளுடன் விளக்குகிறான். இன்றும் அவன் பேச்சில் பலவும் எனக்குப் புரியாமல்தான் இருக்கிறது. நான் கதையாளன். அவன் உளவியலாளன்.

அவன் எனக்கு நண்பன். இப்படிச் சொல்லிக் கொள்வதிலே எனக்குப் பெருமைதான். பெயர் உறாலாஸ்யம். அவனின் ஒரு கவிதை இங்கே -

அதனால்தான்....

------------------------

நிரந்தர வீட்டிற்கு

திறக்கவும் மூடவும்

கதவுகளில்லை

கதவுகள் இல்லாததால்

அது

கல்லறையும் அல்ல

சூன்யமே பூரணமாகும்

மஉறா வித்தை அறிந்த

எறும்பின்

கால்களுக்கு மட்டுமே

அந்த ரகசியம்

புரியும்

அதனால்தான்

புற்று மணல்

மருந்தாகிறது

பாலில் கலந்து ஊட்ட

தேனில் குழைத்துக்

கொடுக்க

நீரில் கரைத்துப்

பற்றுப் போட...!

----------------------------------

கருத்துகள் இல்லை:

  'குற்றம் புரிந்தவன்'  - சிறுகதைத் தொகுப்பு - புஸ்தகா.கோ.இன்  - ல் வெளியிடப்பட்டுள்ளது.    (www.pustaka.co.in) --------------------...