26 நவம்பர் 2011

சந்தோஷத் தருணங்கள்




19-11-2011 சனிக்கிழமையன்று மதுரை ராகப்ரியா இசைக்குழுமமும் மதுரை கடவு இலக்கிய அமைப்பும் இணைந்து திரு சஞ்ஜய் சுப்பிரமணியன் அவர்களின் சங்கீதக் கச்சேரி ஒன்றினை மதுரை ஃபார்ட்ச்யூன் பாண்டியன் நட்சத்திர உணவு விடுதியில் நடத்தியது.

ராக்ப்ரியா இசைக் குழுமம் பல ஆண்டுகளாக இயங்கி வரும் ஒரு இசைக் குழும அமைப்பாகும். இதில் நூற்றுக்கணக்கான உறுப்பினர்கள் பங்கு கொண்டிருக்கிறார்கள். வருடந்தோறும் தவறாமல் பல இளம் இசைக் கலைஞர்களையும், பிரபலமான இசை விற்பன்னர்களையும் அழைத்து வந்து பெருந்திரளான கூட்டத்தோடு சங்கீதக் கச்சேரிகளை நடாத்தி வரும ஒரு கட்டுப்பாடு மிக்க அமைப்பாகும்.

இந்த அமைப்போடு கடவு இலக்கிய அமைப்பும் சேர்ந்து கொண்டதுதான் இங்கே அதி முக்கியம் பெறுகிறது. கடவு இலக்கிய அமைப்பு 2003ம் ஆண்டு துவக்கப்பட்டது. இலக்கியம், இசை, கலாச்சாரம் இவைகளை வளர்த்தெடுத்தல் இதன் நோக்கமாகும். இந்த அமைப்பு இதுவரை எத்தனையோ இலக்கிய நிகழ்வுகளை வெற்றிகரமாக நடத்தியிருக்கிறது.

முதன் முறையாக திருநெல்வேலியில் திரு எஸ். ராமகிருஷ்ணன் அவர்கள் எழுதிய நெடுங்குருதி நாவலின் விமர்சனக் கூட்டத்தோடு ஆரம்பித்து அவரின் அரவான் நாடகம் முதன் முறையாக அரங்கேற்றி தன் இலக்கியப் பணியைத் துவக்கியது.

மதுரையில் மெய்ப்பொருளியல் கவிதை கருத்தரங்கம் மற்றும் தேவேந்திரபூபதியின் பெயற்சொல் கவிதை நூல் வெளியீட்டு விழாவை அடுத்தாற்போல் அரங்கேற்றியது.

திரு தேவேந்திர பூபதி அவர்கள்தான் இக் கடவு அமைப்பைத் தோற்றுவித்தவர். இவர் ஒரு வணிகவரித் துறை அதிகாரி. கவிஞரும் கூட. நவீனத் தமிழ் இலக்கியப் பரப்பில் கவனிக்கத் தக்க முக்கியமான பல கவிதைகளை முன் வைத்ததின் மூலம் தனிக் கவனம் பெற்றவர். இவரின் விடாத முயற்சியின்பாற்பட்டே இந்தக் கடவு அமைப்பு தொடர்ந்து தொய்வில்லாமல் இயங்கி வருகிறது. இதுவரை இந்த அமைப்பின் மூலமாய் சுமார் இருபதுக்கும் மேற்பட்ட இலக்கிய நிகழ்வுகள் அரங்கேற்றப்பட்டுள்ளன.

அப்படியான ஒரு நிகழ்வுதான் கடந்த 19.11.2011 அன்று நடந்த திரு சஞ்ஜய் சுப்பிரமணியன் அவர்களின் தமிழ் இசைக் கச்சேரி. இந்தக் கச்சேரி மும்மூர்த்திகளின் பாடல்களைக் கொண்டதல்ல. முழுக்க முழுக்க தேசீயக் கவி சுப்ரமண்யபாரதியின் செந்தமிழ்ப் பாடல்களைக் கொண்டது. பாரதியின் சிருஷ்டிகள் ஜீவன் நிறைந்தவை. அரண்மனையில முடங்கிக் கிடந்த தமிழை மக்கள் சபையிலே நடமாடச் செய்த்தன் மூலம் தமிழுக்கு விடுதலை பெற்றுத் தந்தவர். பாரதியின் உணர்ச்சி மிகு தேசீயப் பாடல்கள் தமிழ்நாட்டு மக்களிடம் நிலவிய தளர்ச்சியையும், தோல்வி மனப்பான்மையையும் விரட்டி உணர்ச்சி ஊட்டி ஊக்கப்படுத்தியவை. அவரது தேசீய கீதங்கள், தெய்வப் பாடல்கள், நீதி, சமூகம், தனிப்பாடல்கள், கண்ணம்மா பாட்டு, பாஞ்சாலி சபதம், குயில் பாட்டு என்ற அளப்பரிய சாதனைகள் பாட்டுக்கொரு புலவன் பாரதி என்ற பெயரினை நிலை நிறுத்தின. அன்றைய சஞ்சய் அவர்களின் கச்சேரி இவையெல்லாவற்றையும் உள்ளடக்கி ஆரம்பம் முதல் முடிவு வரை பார்வையாளர்கள் அனைவரையும் இருக்கையில் அசைய விடாமல் அப்படியே கட்டிப் போட்டு உட்கார வைத்து விட்டது.

ஆஉறா….ஆஉறா…என்று அசையாத தலைகள் இல்லை. கண்களை மூடித் தன்னை மறந்து ரசிக்காத உள்ளங்கள் இல்லை. கைகளைத் தாளம் போட்டு, இசை நெளிவு சுளிவுகளுக்கு ஏற்றாற்போல், ஏற்ற இறக்கங்களுக்கு ஏற்றாற்போல் அவரவர் அறிந்த பாணியில், அவரவரின் ரசனை வளத்திற்கேற்றாற்போல் ரசித்து மகிழ்ந்தது பாரதியின் அந்த அற்புதமான பாடல்களினாலா அல்லது தேனொழுகும் இந்தப் பாடகராலா என்று வியக்குமளவு கச்சேரி முழுமை பெற்றது.

சஞ்ஜயின் குரல் வளம், அவர் ஆலாபனை செய்யும் பாணி, நீண்ட ராக ஆலாபனைக்குப் பின்னே பாடலுக்குள் அவர் நுழையும் விதம், அற்புதமான ஸ்வரஸ்தானங்களில் அவர் மிளிரும் பாங்கு, சிறிதும் தளர்வடையாது கடைசிவரை முதல் பாடலில் இருந்த உற்சாக மனநிலையிலேயே தன்னை நிலை நிறுத்திக் கொண்டு ரசிகர்களைக் கரம் பிடித்து சங்கீத சஞ்சாரத்திற்குள் மூழ்கி முக்குளிக்க வைத்த விதம், மன ஒருமைப்பாடும், கட்டுப்பாடும், தியான நிலையும் லௌகீக மனநிலையிலிருந்து முற்றிலுமாய் விடுபட்டு, ஏகாந்த நிலைக்குச் சென்று பயணித்து சாந்தியடைந்த பூஜ்ய நிலை என்று எதைச் சொல்வது? எதை விடுவது?

மனித மனம் பஞ்சாய்ப் பறந்து சஞ்சாரம் செய்து தன்னை எடைகளற்ற ஸ்தூலமாய் நிறுத்திக் கொண்டது அன்று.

இங்கே இன்னொன்றையும் மறக்காமல் சொல்லியே ஆக வேண்டும். கவிஞர் திரு தேவேந்திரபூபதி அவர்களின் இந்தப் பெரு முயற்சிக்கு உறுதுணையாய் எப்பொழுதும் நிற்பவர் நவீனத் தமிழ் இலக்கிய உலகின் சிறுகதைப் பரப்பின் எல்லைகளை விரிவுபடுத்திய திரு சுரேஷ்குமார் இந்திரஜித் அவர்கள். யாருடைய பாதிப்புகளும் இல்லாமல் அவருக்கென்று தனியே ஒரு சுயமான தடத்தில் இன்றுவரை பயணிப்பவர். அதில் பிரமிப்பூட்டும் பல சிறுகதைப் படைப்புக்களைத் தமிழ் வாசகர்களுக்குத் தந்தவர். கதைகளின் நிகழ்வுகள் புனைவுதான் என்று நாம் கண்டுபிடிக்க முனைந்தாலும், அந்த நிகழ்வுகளில் ஊடாடி நிற்கும் உள் மன ஓட்டங்கள் கதையை நகர்த்திச் செல்லும் விதமும், நம்மைக் கொண்டு நிறுத்தும் இடங்களும் நம்மைப் பிரமிக்க வைப்பவை. மிகக் குறைவாக எழுதியிருப்பவர்தான் என்றாலும், மிக நீண்ட காலம் ஆழமான வாசகர்கள் மனதில் நின்று நிலைக்கக் கூடிய எழுத்துக்களைப் படைத்துத் தன்னை நிலை நிறுத்திக் கொண்டவர் என்கிற கம்பீரம் இவரைச் சாரும்.

இவர்கள் இருவரின் பெரு முயற்சியின்பாற்பட்டு நடந்த திரு சஞ்ஜய் அவர்களின் 19.11.2011 தேதிய கச்சேரி அன்று இவர்களோடு சேர்ந்து நானும் எனது தனித்திருப்பவனின் அறை சிறுகதைத் தொகுப்பை திரு சஞ்ஜய் அவர்களுக்கு வழங்கி எனது மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டேன். இங்கே கவனிக்க வேண்டிய இன்னொன்று திரு சஞ்ஜய் அவர்கள் மிகப் பெரிய இலக்கிய ரசிகர் என்பது. கணினியில் அவரது ப்ளாக்கைத் திறந்து பார்த்தீர்களென்றால் அவர் இப்போது படித்துக் கொண்டிருக்கும் புத்தகம் பூமணியின் பிறகு என்பதை நீங்கள் அறிவீர்கள். அவர் கையில் இப்போது என் புத்தகம்.

திரு தேவேந்திர பூபதி, நான், திரு சஞ்ஜய், கவிஞர் திரு கலாப்ரியா, திரு சுரேஷ்குமார் இந்திரஜித் (முதல் படம்) கீழே அவர்களோடு பேசி நிற்கும் காட்சி.

clip_image001

திரு சஞ்ஜய் அவர்களுக்கு என்னுடைய சிறுகதைத் தொகுப்பு தனித்திருப்பவனின் அறை புத்தகத்தை வழங்குதல் மற்றும் அவரோடு இணைந்து நின்று நால்வரும் எடுத்துக் கொண்ட புகைப்படம்.

clip_image002

கருத்துகள் இல்லை:

  “தபால் ரயில்“   – தஞ்சாவூர்க் கவிராயர் சிறுகதை   - விமர்சனம் – உஷாதீபன் – விருட்சம் கூட்டம் நாள் 12-04-2024.            அ ஞ்சலட்டை நம் வாழ...