25 நவம்பர் 2011

மனதுக்குள் அழும் மக்கள் கட்டுரை



ஞ்சு வருஷத்துக்கொருதரம் தேர்தல்ல ஒரு ஓட்டு போடுறதுக்குத்தான்யா நீ…ஆனா அதுக்கப்புறம் எனக்காக உழைக்கிறவங்க இவங்கதான்…” என்று தன்னைச் சுற்றி நின்றுள்ள ரௌடிக் கூட்டத்தைக் காண்பிப்பார்.

இப்படியான ஒரு வசனம் தூள் என்ற படத்தில் வரும். ஷாயாஜி ஷின்டே அமைச்சர் பாத்திரத்தில் ஆறுமுகமாய் நடிக்கின்ற விக்ரமைப் பார்த்துச் சொல்வார்.

கிடக்கட்டும். அது விஷயமில்லை இப்போது.

அந்த முதல் ஒரு வரி வசனம்தான் இங்கே முக்கியம். அதை மட்டும் எடுத்துக் கொள்வோம்.

நம் மக்களின் நிலைமையும் இப்படித்தான் இங்கே பரிதாபமாய் உள்ளது.

ஆளாளுக்கு ஒரு ஓட்டுப் போட்டாச்சுல்ல…போங்க…போங்க…இனி டிஸ்டர்ப் பண்ணாதீங்க…எனக்கு நிறைய வேலை இருக்கு….இதுதான் நடக்கிறது இப்போது.

து இல்லாட்டி அது….அது இல்லாட்டி இது…! இப்படித்தான் தமிழகத்தின் நிலைமை 1967 க்குப் பிறகு இன்றுவரை இருந்து தொடர்ந்து வருகிறது.

மூணாவது ஒண்ணுதான் கண்ணுக்கே தெரிலயே…தெரிஞ்சா நாங்க என்ன போடமாட்டம்னா சொல்றோம்…

காதில் விழத்தான் செய்கிறது.

படிப்படியாக எல்லாமும் கெட்டாயிற்று. கல்விக் கூடங்களில் அரசியல் புகுந்தது. மாணவ சமுதாயம் வீதிக்கு வந்தது.

படிக்கத்தானே பள்ளிக்குச் செல்கிறார்கள். இதெல்லாம் எங்கிருந்து முளைத்தது? என்னவோ மாதிரி ஆகிக்கொண்டிருக்கிறதே என்று அப்பாவிப் பெற்றோர் சமுதாயம் பிரமித்தது. கல்வி கற்பிக்கும் ஆசான்களே என்னவோ கை மீறிப் போய் கொண்டிருக்கிறதே என்று பயந்து போய்ப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். அப்படி எல்லோரும் பார்த்துக் கொண்டிருக்கும்போதே எல்லாமும் கொஞ்சங்கொஞ்சமாய் சீரழிந்து போயிருப்பதை உணர ஆரம்பித்தார்கள். அடக்க ஒடுக்கமாய் அமைதியாய் வாழ்ந்த சமூகம்.

படிப்படியா எல்லாத்தியும் வீதிக்கு இழுத்திடுவாங்க போலிருக்குதே…!

மனதுக்குள்ளேயே வருந்தி, அழுது, புழுங்கி, இழந்தவர்கள் அநேகம். எதை? தன் ஆசைப் பிள்ளைகளின் அடிப்படை ஒழுக்கத்தை. அவர்களின் முன்னேற்றத்தை. அவர்களின் நல் வாழ்வினை.

இப்படி நம் உறவுகளிலேயே எத்தனையோ நிகழ்வுகளை நாம் பார்த்திருக்கிறோம். பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

இளைஞர்களில் பலர் பொழுது விடிந்தவுடனேயே….தவறு சில மணி நேரங்கள் கழித்து….ஏனெனில் முதல் நாள் போதை தெளிய வேண்டுமே! காலையும் மாலையும் இதென்ன இங்கே இவ்வளவு கூட்டம்? ஏதேனும் பிரச்னையா? ஏதாவது கலகமா? ஏதாகிலும் போராட்டமா?

ஊறீம்…நன்றாகப் பாருங்கள். தினமும் போகிற போக்கில் அப்பக்கம் திரும்பியே பார்க்காததினால் உங்களுக்குத் தெரியவில்லை. பதினெட்டு, இருபது, இருபத்திரெண்டு, இருபத்திநான்கு, இருபத்தியெட்டு, முப்பது….இன்னும் சொல்லவா…எதற்கு ரெண்டும் நான்குமாய்க் கூட்டிச் சொல்லிக் கொண்டு? பதினெட்டு முதல் முப்பது அல்லது முப்பத்தைந்து வரை என்று சொல்லி விடலாமே! அதற்கு மேல் வயசானவர்கள் கணக்கில்லை.

தப்புங்க நீங்க சொல்றது…பதினெட்டெல்லாம் இல்ல….

இல்லையா…? பின்ன…?

பதிமூணு…பதினைஞ்சு...ன்னேஆரம்பிக்கலாம்…அதாவது சொல்லலாம்…அந்த வயசுப் பசங்களே அங்கதான் கெடக்காங்க…..

காதில் நாராசமாய் விழுகிறது இந்தப் பேச்சு. மனசு துடிக்கவில்லையா உங்களுக்கு? பெருமூச்சு எழவில்லையா? வேதனையடைகிறதா உங்கள் உள்ளம்? முகம் தெரியாத அந்தப் பலருக்காக நீங்கள் மன வேதனை கொள்கிறீர்களா? கொள்ள வேண்டும். அதுதான் இந்தச் சமுதாயம் மேம்பட வேண்டும் என்று விரும்பும் ஒவ்வொரு மனிதனுக்கும் இருக்க வேண்டிய உண்மையான உணர்ச்சி. அப்படியான இந்த இளைஞர் கூட்டம் எங்கே கிடக்கிறது? இதை இத்தனைக்கும் பிறகு சொல்லித்தான் தெரிய வேண்டுமா?

உலகே மாயம்…வாழ்வே மாயம்…என்று பாடித் தள்ளாடிவிட்டு நிறுத்திக் கொள்ளலாமா? தொலையட்டும் என்று விட்டுவிடலாமா?

வாழ்வே மாயமா? எப்படி? இருக்கும்வரை நிஜம்தானே? நிஜமாய் வாழ வேண்டாமா? நிஜமாய் வாழ்வதென்றால் எப்படி? நம்மை நோக்கி வரும் எல்லாவற்றையும் கண்டு, கேட்டு, சகித்து, சுகித்து, முடிகிறதோ முடியவில்லையோ அப்படியே ஓய்ந்து ஒடுங்கிப் போவதா? அதுதான் நிஜமா?

ஆம்! ஒடுங்கித்தான் போகணும். வேறு வழி? அதுதான் ஒரு ஓட்டுப் போட்டாயிற்றே….முடிந்ததையா கடமை…இனி என்ன இருக்கிறது. வருவதை எதிர்கொள்ளுங்கள். முடிகிறதோ முடியவில்லையோ, சகித்துக் கொண்டு வாழப் பழகிக் கொள்ளுங்கள். சகிக்க முடியவில்லையா, மூலையில் உட்கார்ந்து அழுங்கள். ஜாக்கிரதை….அதையும் உங்கள் வீட்டுக்குள்ளேயே உட்கார்ந்து செய்யுங்கள். ரோட்டுக்கு வந்து அழுதாலும் கேட்பதற்கு நாதியில்லை. அதுதான் ஒரு ஓட்டுப் போட்டுட்டீங்கல்ல…இன்னும் என்ன?

நிறுத்துங்க…நீங்க என்ன சினிமா வசனம் மாதிரிப் பேசிட்டே போறீங்க…?

அப்பத்தான உங்களுக்குப் புரியும். நமக்குத்தான் சினிமாங்கிறது ரத்தத்தோட ஊறின விஷயமாச்சே…

சரி…விஷயத்துக்கு வாங்க…ஒட்டுப் போட்டோம்…இல்லைன்னு யார் சொன்னா? அதுக்காக எல்லாத்தையும் சகிச்சிக்கிட்டு இருக்க முடியுமா?

சகிக்காம? பின்ன என்ன செய்யப் போறீகளாம்? போராடப் போறீகளோ? போராடிக் கிழிச்சிருவீங்க…தெரியாதா ஒங்களப்பத்தி? ஏன்யா வீணா எனர்ஜிய வேஸ்ட் பண்றீங்க….

என்னங்க இப்டிப் பேசுறீங்க? இதுநாள் வரையிலும் தலைமைச் செயலகம், அண்ணா நூலகம்னு என்னென்னவோ மாத்தம்லாம் செய்றாங்களேன்னு பார்த்திட்டிருந்தோம்…இப்ப அங்க சுத்தி, இங்க சுத்தி கடைசில நம்ம மடிலவேல்ல கை வைக்கிறாங்க….சாதாரண ஆளுங்கய்யா நாங்கள்லாம்…எங்களுக்கு இதெல்லாம் தாங்காதய்யா…..

எதைச் சொல்றீங்க…? பஸ் கட்டண உயர்வு….பால் விலை உயர்வுன்னு கூட்டியிருக்காங்களே….அதைத்தானே சொல்ல வர்றீங்க…?

ஆமாங்க சாமி…..தலைக்கு மேல வெள்ளம் போன கதையா இருக்குங்க…

அப்டியெல்லாம் ஒண்ணும் இல்லீங்க….அஞ்சு வருஷத்துக்குப் படிப்படியாக் கூட்டுறதை ஒரேயடியா இப்பவே கூட்டிட்டாங்க…அவ்வளவுதான்…

அப்டியா…நீங்க என்ன புதுக் கதை சொல்றீங்க…

இப்போதைக்கு அப்டித்தான்னு வச்சிக்குங்களேன்…நீங்கதான் இன்னும் நாலு நாலரை வருஷங்கழிஞ்சா எல்லாத்தையும் மறந்திடுவீங்களே…இது இல்லாட்டி அது…அது இல்லாட்டி இது….அவ்வளவுதானே…

அப்டியில்லீங்க…ரொம்ப ஓவருங்க…பஸ் சார்ஜ் எடுத்துக்குங்களேன்….இப்போ மதுரைலேர்ந்து சென்னைக்கு இருந்த கட்டணம் ரூ.255. இப்போ எவ்வளவு தெரியுமா? ரூ. 325. தாங்குமாங்க…? ஒரேயடியா எழுபது கூட்டுனா என்னாங்க அர்த்தம்?ஏதோ பத்து இருபது கூட்டினா சமாளிக்கலாம். சரி கெடக்கட்டும்னு விடலாம். இப்டியாங்க? எம்பையன் அங்கதான் இருக்கான்…எங்க அம்மா அங்கதான் இருக்குது…நா போய் பார்க்க வேணாமா?

உங்கள யாருங்க போக வேணாம்னு சொன்னா…நா ஒரு வழி சொல்றேன் கேளுங்க…ரெண்டு மாசத்துக்கு ஒரு வாட்டி போவீங்களா…? சொல்லுங்க…அப்டித்தானே…இனிமே அத நாலு மாசத்துக்கு ஒரு வாட்டின்னு மாத்திக்குங்க….பேசாம போன்ல பேசறதோட நிறுத்திக்குங்க….எதுதாங்க நிலையானது இந்த உலகத்துல…அதுனால மனச தாமரை இலைத் தண்ணி மாதிரி வச்சிக்குங்க…ஒட்டியும் ஒட்டாம……நம்ம ரஜினி கூட ஏதோ ஒரு படத்துல பாடுவாரே….கேட்டிருப்பீகளே….நமக்குத்தான் எல்லாத்துக்கும் சினிமா இருக்கே…அத விட வேறே என்ன வேணும்...

நா ஒண்ணக் கேட்டா நீங்க என்னென்னமோ சொல்றீகளே…?

இன்னொரு ஐடியா இருக்கு சொல்லட்டுமா….

சொல்லுங்கய்யா…எம்புத்திக்கு எதுவும் தோணல….

அதுக்குத்தான் என்ன மாதிரி ஆளக் கேட்கணும்ங்கிறது.

அம்மாவப் பார்க்கணும்ங்கிறீங்கல்ல…பேசாம ரெண்டு நாளைக்கு முன்னாடியே கிளம்பிடுங்க… இங்கருந்து கிளம்பி திருச்சி வரைக்கும் நடந்து போயிடுங்க…ரெண்டு நாள் போதாதா அதுக்கு. பிறகு பஸ்ல போங்க சென்னைக்கு….நீங்க நினைக்கிற பழைய கட்டணத்துல போய்ச் சேர்ந்துடலாமுல்ல…அதுபோல அங்கருந்து வரைல விழுப்புரம் வரைக்கும் நடந்து வந்திடுங்க…பெறவு பஸ்ஸைப் பிடிங்க….செலவு சுருக்கமாயிடும்ல…

அய்யா…நீங்க வெளையாடுறீங்க…

விளையாடலீங்க…அதுதான் உண்மை…இனிமே நமக்கு நாமளே யோசிச்சு இப்படியெல்லாம் செய்துக்கிட்டாத்தான் உண்டு…விலை வாசி தாறுமாறா ஏறிப் போச்சா… ஒரு வேளை விரதம் இருக்கிறதுங்கிற பழக்கத்தை ஏற்படுத்திக்கிங்க…ஏற்கனவே நிறையப் பேர் அப்டித்தான் இருக்காங்கன்னு நீங்க சொல்றது என் காதுல விழுகுது…இதுவரைக்கும் இல்லாதவங்களுக்கு நா சொல்றேன்….எப்டித் தாங்குறீங்கன்னு வேண்ணா விரதம் இருக்கிறவங்களைக் கேட்டுக்குங்க…இதமாதிரி எல்லா ஊருக்கும் நாற்பது ஐம்பது எழுபதுன்னு கட்டணமெல்லாம் கூடிப் போச்சு….ஒண்ணு தொலையுதுன்னு கொடுத்து அழுகணும்…முடியலயா…நா சொன்ன மாதிரிச் செய்யணும்….நவீன வழி ஒண்ணு இருக்கு….அது வசதியுள்ளவுகளுக்குத்தான் ஆகும். அத வேணா சொல்லட்டுங்களா…..

அதென்னங்க அது….?

நீங்க நியூஸ்லெல்லாம் ஏற்கனவே பார்த்திருப்பீங்களே…தெரியாதா?

கம்ப்யூட்டர் யுகமுங்க இது….வீடியோ கான்பிரன்சுன்னு ஒண்ணு இருக்குதே…அத மாதிரி வீட்டுல செட் பண்ணிக்குங்க…உங்க உறவுகள்லயும் அதமாதிரி ஏற்பாடு பண்ணிட்டாங்கன்னு வச்சிக்குங்க…உட்கார்ந்த எடத்துலயே எல்லாத்தையும் பார்த்துடலாம்…பேசிடலாம்…முடிஞ்சி போச்சு…..நிழலே நிஜமாயிடும்….

போங்க தம்பீ….நீங்க என்னென்னவோ சொல்றீங்க….காலைல எந்திருச்சி இன்னும் காபி கூடச் சாப்பிடாம இருந்திட்டிருக்கேன் நானு…..

அதான் பால் விலை ஏறிப்போச்சில்ல….காபியைக் குறைச்சிக்குங்க…இல்லையா கடுங்காப்பி சாப்பிடுங்க…. அதுவுமில்லையா பேசாம காபி, டீ சாப்பிடுறதையே நிறுத்திடுங்க…தொல்லையில்லாமப் போச்சு…மோருக்கு மட்டும் உறையிடுறதுக்கு கொஞ்சூண்டு பால் வாங்கினாப் போதும்ல…வீசம்படி…அதாங்க…நூறு மிலி…..செலவு மிச்சம்…நீங்க என்ன விலை உயர்த்துறது…நானென்ன சாப்பிடுறதுன்னு இருந்திடுங்க….அரசாங்கத்துக்குக் கட்டுப்பட்ட சிட்டிசன்ங்கதான் நாமன்னாலும், தப்பா சொல்றனோ, சட்டத்துக்குக் கட்டுப்பட்ட சனங்க நாம…அதான…? லா அபைடிங் சிட்டிசன்….ஓ.கே…அதுக்காக எல்லாத்தையும் கோயில்மாடு மாதிரி தலையாட்டிட்டே ஏத்துக்க முடியுமா? ஏதேனும் ஒரு வழில நம்ம எதிர்ப்பத் தெரிவிக்க வேணாமா? நம்மளால முடிஞ்சது எது? காபி, டீய நிறுத்துறதுதான். அது மூலமா பாலைப் புறக்கணிக்கிறோம்ல….நீங்க விலை கூட்டின பாலை நான் வாங்க முடியாது….வாங்குறதும், நிறுத்துறதும் என் இஷ்டம்…..தடுத்துப் பாரு பார்க்கலாம்….எப்டீ? அப்டீ நிறையப் பேரு நிறுத்திப்புட்டோம்னு வச்சிக்குங்க…ஆட்டமேடிக்கா விலை குறைஞ்சிடும்…ரொம்பக் கேட்டீங்கன்னா இன்னொரு பதில் இருக்கு எங்கிட்ட….

என்னா அது?

மத்த மாநிலத்தப் பாருங்கன்னுடுவேன்…அப்புறம் உங்க மூஞ்சிய எங்க கொண்டுபோய் வச்சிக்குவீங்க….ஆனாலும் பாவந்தாங்க நீங்க….ஒரு ஓட்டுக்கு மேல உங்ககிட்ட எந்தப் பவரும் இல்லியேங்க…அத நெனச்சத்தான் பரிதாபமா இருக்கு…

பவரு அவுங்ககிட்டத்தான் இருக்குது…தெரியுது…தெரியுது…அதுக்காக நம்மகிட்ட ஒண்ணொண்னையும் கேட்டுக் கேட்டுச் செய்ய முடியுமா…? அவுகளா நல்லது செய்வாங்கன்னுதான் கொண்டு வந்தோம்…இப்ப என்னடான்னா இருக்கிறதையும் புடுங்குறாங்க…விலையைத் தாறுமாறாக் கூட்டுறதும், நம்ம வாங்குற திறனைப் புடுங்குறதாத்தான அர்த்தம்…அதைச் சொன்னேன்…

கேட்டா எல்லாமும் நமக்காகத்தான்னு சொல்லுவாங்க…..

என்னா சொல்றாக இவுகன்னு…மிரண்டுபோய்ப் பார்ப்பீங்க…இல்லன்னா புரிஞ்சமாதிரி நடிப்பீங்க…இல்லன்னா மண்ணு மாதிரி இருப்பீங்க…வேறென்ன செய்ய முடியும் உங்களால…? பாவங்க நீங்க…..உயிரோட இருக்கிறவரைக்கும் ஒரு ஓட்டுத்தான உங்களுக்கு!

சும்மா அதையே சொல்லாதீங்க தம்பீ…வெட்கமா இருக்கு….

க்கள் மிரண்டு போயிருக்கிறார்கள். ஊருக்குள்ளேயே ஏறி இறங்கினால் குறைந்தது ஏழு ரூபாய். ரெண்டு ஸ்டாப் தாண்டினால் டபிள்….கடையில் நின்று டீ குடித்தால் பத்து. காபி என்று நாக்கு இழுத்தால் பன்னிரெண்டு. உருவி உருவிக் கொடுத்து ஊருக்குப் போகாட்டாத்தான் என்ன? இனிமே ரொம்ப கவனமா இருக்கணும்…நினைத்துக் கொள்கிறார்கள்.

ஒருவர் வேலை பார்க்கும் குடும்பங்களில் ஒரு சம்பாத்தியத்தை வைத்துக் கொண்டு ஒன்றுமே செய்ய முடியாமல் போனது வெகு காலத்துக்கு முன்பே….இப்பொழுது இருவர் வேலை பார்க்கும் குடும்பங்களிலும் அவர்கள் கவனமாய் இருந்தால்தான் போயிற்று. கொஞ்சம் அகலக்கால் வைத்தால் அம்பேல்தான். அதுதான் அவுகள்லாம் டூ வீலர் வச்சிருக்காகல்ல….

அதுவும் பெட்ரோல் இப்போ ஏறிப்போய்த்தான கெடக்கு…

அதான் ரெண்டு ரூபா குறைச்சிட்டாங்கல்ல…பெறகென்ன…? எல்லாம் உங்களுக்காகத்தான்…அத நினைங்க…

அடுத்தாற்போல் மின் கட்டணம் உயரப் போகிறது. முன்னூறு வந்த இடத்தில் நானூற்று ஐம்பது வருகிறதோ இல்லை ஐநூறு வருமோ? இனிமேல் வீட்டில் உள்ள எல்லோரும் ஒரே ஒரு அறையில் அதாவது உறாலில் மொத்தமாய் மூலைக்கொருவராய் உட்கார்ந்து கொள்ள வேண்டியதுதான். அம்மா படுத்திருக்கட்டும், இல்லையெனில் காய்கறி நறுக்கட்டும்….குழந்தைகள் படிக்கட்டும். அப்பா பேப்பர் படிக்கட்டும்…தாத்தாவும், பாட்டியும் படுத்து உறங்கட்டும். டி.வி.யும் ஓடட்டும்.

நீங்க என்ன? எந்த வீட்டுல பாட்டியும் தாத்தாவும் இருக்காக இப்ப? என்னத்தவோ உளறிட்டிருக்கீங்க…? அவுகல்லாம் முதியோர் இல்லத்துலல்லங்க இருக்காங்க…?

ஓ! ஸாரி…ஸாரி…மறந்தே போயிட்டேன்…..

எங்க அப்பாவுக்கு இந்த அக்டோபரோடதான் அறுபது முடிஞ்சிச்சி….சீனியர் சிடிசன் ஆயிட்டோம்…இனிமே குறைஞ்ச டிக்கெட்டுல சென்னைக்குப் போயிட்டு வரலாம்னு தீட்டிக்கிட்டிருந்தாரு….அவர் கையை நீட்டச் சொல்லி தடவி விட்டுட்டாங்க இப்போ…? வாயில மண்ணு…எப்டி…?

அவர் நெனச்சது ஏற்கனவே இருந்த ஒரிஜினல் ரேட்டுலேர்ந்து 40 சதவிகிதம் குறையுமேங்கிறதுதான். இப்போ விலையைக் கூட்டிட்டதுனால, 40 பர்ஸன்ட் கழிவு போக பழைய ஒரிஜினல் ரேட்டுக்கும் மேல வந்திடுவார் போலிருக்கு…அதுனாலதான் அவர் வாயுல மண்ணுன்னு சொல்றேன்……

தப்புங்க….

ஒ! ஸாரி…ஸாரி…வாயுல மண்ணுல்ல…நெனப்புல மண்ணு…..இப்போ கரெக்டா…?

நா ஒங்களத் தவிர யாருகிட்டப் போவேன்….மத்திய அரசு கைய விரிச்சிடுச்சி…..இப்போ அத நிரப்ப வேண்டியது நீங்கதான…தயவுசெஞ்சு பொறுத்துக்குங்க…..ஒத்துழைப்புக் கொடுங்க….

ஒத்துழைப்புக் கொடுக்கச் சொல்றாங்க…எப்டீ?

எப்பிடி? நா சொன்னேன்ல….அப்டித்தான்… …நடந்து போய் தூரத்த நாமளே குறைச்சிக்கிட்டு, பிறகு பஸ்ல போறது…..டீ…காபி குடிக்கிறத நிறுத்தறது….இல்லன்னா கடுங்காப்பி குடிக்கிறது…..வீட்டுல நாலஞ்சு ரூம் இருந்தாலும் ஒரே ரூம்ல அடையறது…

ஆமா…அதுதான்…இன்னும் நிறைய இலவசமெல்லாம் உங்களுக்குக் கொடுக்க வேண்டிர்க்கில்ல….அதுக்கெல்லாம் துட்டு வேண்டாமா? இலவசமெல்லாம் வேண்டாம்னு சொல்லுங்க…இந்தத் தொந்தரவெல்லாம் வராது.

நாங்களா கேட்டோம்…அவுகளாத்தானே தர்றோம்னு சொன்னாங்க…

அவுக தர்றோம்னு சொன்னதுனாலதான நீங்க ஓட்டுப் போட்டீங்க….? அதாங்க….ஒரு ஓட்டு…..அஞ்சாண்டுக்கு ஒரு ஓட்டு….

என்னங்க நீங்க…எங்ககிட்டயே வாங்கி எங்களுக்கே திருப்பிக் கொடுக்கிறீங்க…கேட்டா என்னென்னமோ சொல்றீங்க…எங்களையே திருப்புறீங்க…?

போங்க பேசாம…நா கொஞ்சம் தனியா உட்கார்ந்து அழணும்…போலிருக்கு…..என்னைக் கொஞ்சம் தனியா விடுறீங்களா…?

மக்கள் மனதுக்குள் அழுது கொண்டிருக்கிறார்கள்.

யார் வந்துதான் நமக்கு விடியும்?

---------------------------

கருத்துகள் இல்லை:

  'குற்றம் புரிந்தவன்'  - சிறுகதைத் தொகுப்பு - புஸ்தகா.கோ.இன்  - ல் வெளியிடப்பட்டுள்ளது.    (www.pustaka.co.in) --------------------...